சிறுமியை உயிருடன் விட்டதற்காக பலாத்கார குற்றவாளியின் தண்டனையை குறைத்து கோர்ட்டு உத்தரவு


சிறுமியை உயிருடன் விட்டதற்காக பலாத்கார குற்றவாளியின் தண்டனையை குறைத்து கோர்ட்டு உத்தரவு
x

மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகளாக குறைத்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.



இந்தூர்,


மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு குடிசை பகுதியில் 4 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அந்த குடிசைக்கு அருகிலேயே கூடாரம் ஒன்றை அமைத்து மற்றொரு நபர் தங்கியுள்ளார். இவர்கள் அனைவரும் தொழிலாளர்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பணம் தருகிறேன் என கூறி சிறுமியை கூடாரத்தில் தங்கியிருந்த தொழிலாளி அழைத்து உள்ளார். இதன்பின்னர், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் பாட்டி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நடந்த பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

2007-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் கூலி தொழிலாளியை குற்றவாளியாக அறிவித்து இந்தூரில் உள்ள கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றவாளியான அந்த நபர் ஐகோர்ட்டின் இந்தூர் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், 15 ஆண்டுகளாக சிறை தண்டனையில் உள்ளேன். இதுவே போதும் என பரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை அந்த அமர்வின் நீதிபதிகளான சுபோத் அபியாங்கர் மற்றும் சத்யேந்திர குமார் சிங் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அதில், பிசாசு போன்ற குற்றவாளியின் செயலானது பெண்களின் கண்ணியம் மீது எந்தவித மரியாதையும் கொண்டிருக்கவில்லை என தோன்றுகிறது.

4 வயது சிறுமியை கூட பலாத்காரம் செய்த இந்த வழக்கில், தண்டனையை அனுபவித்து வரும் குற்றவாளியின் தண்டனையை குறைப்பதற்கு ஏற்ற வழக்காக கோர்ட்டு இதனை கவனத்தில் கொள்வதற்கு எதுவுமில்லை.

எனினும், சிறுமியை குற்றவாளி உயிருடன் விடுவதற்காக இரக்கமுடன் இருந்திருக்கிறார் என்ற உண்மையை பரிசீலனை செய்யும்போது, ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகளாக குறைப்பது என்று கோர்ட்டு கவனத்தில் கொள்கிறது என கூறி, ஆயுள் தண்டனையை கடுமையான சிறை தண்டனையான 20 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டு உள்ளது.


Next Story