வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்


வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்
x
தினத்தந்தி 3 Dec 2023 7:06 AM GMT (Updated: 3 Dec 2023 7:17 AM GMT)

சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் 'மிக்ஜம்'புயல் நிலை கொண்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் புயல் நிலை கொண்டுள்ளது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது.

மேலும் இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் அந்த பகுதிகளில் சுமார் 90 முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புயல் காரணமாக இன்றும், நாளையும் வட தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், 'மிக்ஜம்'புயல் நாளை மறுநாள் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story