தேச விரோத கருத்துகளால் பதற்றம்; ஒடிசா உத்கல் பல்கலை கழகத்தில் பேராசிரியர், மாணவர்கள் இடையே மோதல்


தேச விரோத கருத்துகளால் பதற்றம்; ஒடிசா உத்கல் பல்கலை கழகத்தில் பேராசிரியர், மாணவர்கள் இடையே மோதல்
x

ஒடிசாவில், தேச விரோத கருத்துகள் பற்றி பேசுகிறார் என நேரு பல்கலைக்கழக பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.


புவனேஸ்வர்,


ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலை கழகத்தில், ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜும்தார் என்பவர் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வருகை தந்து உள்ளார்.

அவர் இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்வி கொள்கை என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். சிட்டிசன்ஸ் மன்றம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கருத்தரங்கில் தேச விரோத கருத்துகளை பற்றி விவாதிக்கப்படுகிறது என குற்றச்சாட்டு கூறி ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பு அவர் மீது தாக்குதல் நடத்தியது.

இதன்பின்னர், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதுபற்றி இரு தரப்பினரும் ஷாகீத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

பேராசிரியர் சுர்ஜித் பேசும்போது, தேசத்திற்கு எதிரான சில கருத்துகளை கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், உடனே மாணவர்கள் அவரை தாக்க தொடங்கி உள்ளனர்.

சிட்டிசன்ஸ் மன்றத்தின் நிர்வாகியான பிரதீப் நாயக் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திரா ஜெனா ஆகியோரை தரக்குறைவாக மாணவர்கள் திட்டியும் உள்ளனர்.

இதனால், பாதியிலேயே கருத்தரங்கம் நின்று போனது. எனினும், இந்த மோதலுக்கான உண்மையான காரணம் பற்றி உடனடியாக உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story