சுக்தேவ் கோகமெடி கொலை வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்த டெல்லி போலீசார்


சுக்தேவ் கோகமெடி கொலை வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 3 பேரை கைது செய்த டெல்லி போலீசார்
x

குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார்.

இந்த சூழலில், சுக்தேவ் சிங் ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 3 பேர் அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுக்தேவ் சிங் கோகமெடியும், அவருடன் இருந்த நவீன் சிங் ஷெகாவத் என்பவரும் பலியாகினர். முன்னதாக சுக்தேவ் சிங் கோகமெடியின் பாதுகாவலர்கள் சுட்டதில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்ற 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

ராஜபுத்திர இளைஞர் அமைப்பின் தலைவர் வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு ராஜபுத்திர சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஷ்டிரிய ராஜபுத்திர கர்னி சேனா உள்பட பல்வேறு ராஜபுத்திர அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

போராட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டு டயர்களை எரித்தும், கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது என்கவுண்ட்டர் செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். பல இடங்களில் போராட்டக்காரர்கள் தண்டவாளங்களில் இறங்கி ரெயில்களை மறித்தனர். முழு அடைப்பு போராட்டத்தால் ராஜஸ்தான் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனைத்தொடர்ந்து சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலையில் தொடர்புடைய நபர்களை வலை வீசி தேடி வருவதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சுக்தேவ் சிங் கோகமெடியின் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் போலீசாரின் கூட்டு நடவடிக்கை காரணமாக, சுக்தேவ் சிங் கோகமேடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரோகித் ரத்தோர் மற்றும் நிதின் பவுஜி உட்பட மூன்று குற்றவாளிகளை சண்டிகரில் இருந்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் டெல்லிக்கு அழைத்து வரப்படுவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story