டெல்லி: மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு


டெல்லி:  மல்யுத்த வீரர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவு
x
தினத்தந்தி 24 May 2023 4:55 PM GMT (Updated: 24 May 2023 5:52 PM GMT)

டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிரான குற்ற வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் தீவிரமடைந்து உள்ளது.

இந்த விவகாரத்தில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி அமைதியாக மகளிர் கூட்டம் ஒன்றை நடத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்து உள்ளனர். இதில், அனைத்து முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என வினேஷ் போகத் கூறினார். எங்களுக்கு ஆதரவு தரும் பெண்களால் முதன்மையாக இது நடத்தப்படும். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் நடைபெற கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் அமைதியான போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இவர்களது போராட்டத்திற்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், பிரிஜ் பூஷண் சமீபத்தில் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். அதே சோதனை வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியாவுக்கும் நடத்தப்பட்டால் அதற்கு தயார் என பதிவிட்டார்.

இந்த சூழலில் பஜ்ரங் பூனியா செய்தியாளர்களிடம் பேசும்போது, நார்கோ சோதனை செய்ய நாங்களும் தயார் என்று முன்பே கூறி விட்டோம். சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் இந்த உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும். அதனை நேரலையாக நாடு முழுவதும் பார்க்க வழி செய்ய வேண்டும். அப்போதுதான், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவருக்கும் மற்றும் அவருக்கு எதிராக புகார் அளித்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன என மக்களுக்கு தெரிய வரும் என கூறினார்.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்ற வழக்கு பதிவாகி உள்ளது. 2 மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் ஒரு மல்யுத்த வீரருக்கு எதிரான புகாரை பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு நாளை (வியாழ கிழமை) விசாரணை செய்ய உள்ளது.

இந்த புகாரை பாம் பாம் மகராஜ் நவ்ஹதியா அளித்து உள்ளார். புகாரில், எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பயன்படுத்த தகாத வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். சரண் சிங்கின் நடத்தையை படுகொலை செய்து உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார். சரண் சிங்குக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை மற்றும் தனிப்பட்ட லாபத்திற்கானவை என்றும் தெரிவித்து உள்ளார்.


Next Story