டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு


டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் வரை நீட்டிப்பு
x

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி சிசோடியாவை சிபிஐ கைது செய்தது.

டெல்லி,

டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

பின்னர், டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது தனியே அமலாக்கத்துறை கடந்த மார்ச் 9-ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரை சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.

இதனிடையே, சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அவர் ரோஸ் அவன்யூ கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றமன்ற காவலை ஜூன் 2-ம் தேதிவரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கபப்ட்டார்.

முன்னதாக, அமலாக்கத்துறை வழக்கிலும் சிசோடியாவுக்கு வரும் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story