டெல்லி இளம்பெண் விவகாரம்: மேலும் 2 பேருக்கு தொடர்பு; சாட்சிகளை கலைக்க முயற்சி


டெல்லி இளம்பெண் விவகாரம்:  மேலும் 2 பேருக்கு தொடர்பு; சாட்சிகளை கலைக்க முயற்சி
x

டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகளுடன் தொடர்புடைய 2 பேர் அவர்களை காப்பாற்ற முயன்றது தெரிய வந்துள்ளது.



புதுடெல்லி,


டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழியுடன் அமர்ந்து சென்ற அஞ்சலி சிங் (வயது 20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தனது நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை இரவு வரை இருந்து முடித்து கொடுத்து விட்டு பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு உள்ளார்.

அவர் மீது அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அவரது உடல் காரில் சிக்கியபடி பல கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடந்து உள்ளது. அந்த கார், குறிப்பிட்ட சாலையில் சுற்றி, சுற்றி 4-5 முறை வந்துள்ளது. மொத்தம் 12 கி.மீ. தொலைவுக்கு அந்த பெண்ணின் உடல் இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

இதன்பின் வேறொரு இடத்தில் நிர்வாண கோலத்தில் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பல்வேறு விடையில்லாத மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், டெல்லி போலீசின் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ள 5 பேரிடம் விசாரித்ததில், சம்பவத்துடன் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.

அவர்கள் அஷுதோஷ் மற்றும் அங்குஷ் கன்னா என தெரிய வந்துள்ளது. அவர்களை தேடி வருகிறோம். இவர்கள் இருவரும் போலீசாரின் காவலில் உள்ள 5 பேரின் நண்பர்கள். அவர்கள் அனைவரையும் காப்பாற்ற இந்த 2 பேர் முயன்றனர் என கூறியுள்ளார்.

அவர்களில் அஷுதோஷ் என்பவர் காரின் உரிமையாளர். அங்குஷ், குற்றவாளிகளில் ஒருவரது சகோதரர். அவர்கள் இருவரும் சாட்சிகளை கலைக்க முயன்றுள்ளனர்.

நாங்கள் தொடர்ந்து பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம். சாட்சியின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம். அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளார்.


Next Story