கனமழை காரணமாக கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு


கனமழை காரணமாக கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
x

கனமழை காரணமாக கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கினாலும், எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அணைகளும் வறண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இந்த நிலையில் ஜூலை மாத தொடக்கத்தில் சில நாட்கள் பலத்த மழை கொட்டியது.

ஆனால் அதன்பிறகு 10 நாட்களுக்கு மேலாக மழை எதுவும் பெய்யாமல் இருந்தது. பின்னர் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதனால் கர்நாடகத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில் கர்நாடகாவில் கனமழையின் காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிரேட்டர் பெங்களூர் பெருநகர மாநகராட்சியின்படி (பிபிஎம்பி), கர்நாடகாவில் ஜூலை 19-ந்தேதி வரையில் 4,013 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெங்களூரில் மட்டும் 2,065 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் பதிவாகியுள்ள மொத்த வழக்குகளில் 51.4 சதவீதமாகும்.

கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 3,403 வழக்குகள் பதிவானது. அந்த வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு 18 சதவீதம் அதிகரித்துள்ளது. கிரேட்டர் பெங்களூர் பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் ஜூன் மாதத்தில் 689 ஆக இருந்த டெங்கு பாதிப்பு, ஜூலை பாதியில் 825 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரு கிழக்கு மற்றும் மகாதேவபுரா மண்டலங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன.


Next Story