'மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' - பிரதமர் மோடி


மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் மோடி
x

Image Credits : PTI

'மகாதேவ்' என்ற பெயரை கூட காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

ராய்ப்பூர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரசாரத்தில் பேசிய அவர், 'ஊழல் செய்து தனது கருவூலத்தை நிரப்பும் பணிக்கு மட்டும் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது. உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடவில்லை. அவர்கள் மகாதேவ் என்ற பெயரை கூட விட்டுவைக்கவில்லை. மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதல்-மந்திரி பூபேஷ் பாகேலுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் மீது விசாரணை நடந்து வருகிறது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பைசாவிற்கும் அவர்கள் கணக்கு சொல்லவேண்டும். சத்தீஷ்காரில் மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்' என்று கூறினார்.


Next Story