ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு; அதிர்ச்சியில் அண்ணனும் உயிரிழந்த பரிதாபம்


ஏரியில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு; அதிர்ச்சியில் அண்ணனும் உயிரிழந்த பரிதாபம்
x

விநாயகர் சிலையை ஏரியில் கரைத்தபோது தண்ணீரில் மூழ்கி இரண்டு பேர் பலியானார்கள். மேலும் தம்பி இறந்த அதிர்ச்சியில் அண்ணனும் உயிரிழந்தார்.

ஹாசன்:

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி அருகே வடகேரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 32). அதேப்பகுதியை சோ்ந்தவர் பிரவீன்(28). இந்த நிலையில், அந்த கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அந்த விநாயகர் சிலையை கரைக்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாகராஜும், பிரவீனும் கலந்துகொண்டனர். விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று அந்தப்பகுதியில் உள்ள ஏரியில் கரைத்தனர். அப்போது, பிரவீனும், நாகராஜும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி அரிசிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நாகராஜ் இறந்தது குறித்து பெங்களூருவில் வசித்து வந்த அவரது அண்ணன் மது(37) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அரிசிகெரேவுக்கு விரைந்து வந்தார்.

பின்னர் அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர், தம்பியின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது மது, திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை மீட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. தம்பி இறந்த அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து அரிசிகெரே புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story