சர்வாதிகாரிகளுக்கு எதிராக காங்கிரசார் போராட வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு


சர்வாதிகாரிகளுக்கு எதிராக காங்கிரசார் போராட வேண்டும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

சர்வாதிகாரிகளுக்கு எதிராக காங்கிரசார் போராட வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

பெங்களூரு:

சர்வாதிகாரிகளுக்கு எதிராக காங்கிரசார் போராட வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு

கர்நாடக காங்கிரஸ் சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு நாள் விழா குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரசார் அன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினர். இன்று காங்கிரசார் மதவாதம், சர்வாதிகாரிகளுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் பெங்களூருவுக்கு வந்து ஒற்றுமையை வெளிப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். நமது அடுத்த இலக்கு அடுத்த ஆண்டு(2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி, 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலும் ஆகும்.

ராகுல் காந்தியின் பாதயாத்திரை

கர்நாடகத்தில் காங்கிரசை வெற்றி பெற வைத்துள்ளோம். நாம் ஒற்றுமையாக செயல்பட்டதால் இந்த வெற்றி சாத்தியமானது. இந்த வெற்றி மூலம் நாம் நாட்டுக்கு மாதிரியாக மாறியுள்ளோம். மேகதாது பாதயாத்திரை, சுதந்திர தின நடைபயணம், ராகுல் காந்தியின் பாதயாத்திரை போன்றவை கட்சிக்கு பலம் கொடுத்தது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி பெறும் என்று நான் கூறினேன். அடுத்தடுத்த நாட்களில் அது 141 அதிகரித்தது. இதை நான் கூறியபோது சிலர் கேலி செய்தனர்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு சோனியா காந்தி என்னிடம் பேசும்போது, தேர்தலில் நமது கட்சி 136 இடங்களில் வெற்றி பெறும் என்று எப்படி சரியாக கணித்தீர்கள் என்று கேட்டார். நான் கடுமையாக உழைக்கிறேன், அதனால் சரியாக சொன்னேன் என்று கூறினேன். நமது அரசின் உத்தரவாத திட்டங்களால் காங்கிரசார் மட்டும் பலன் அடையவில்லை. பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும் பலன் அடைந்துள்ளனர். அவர்களை நமது கட்சியின் பக்கம் இழுக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.


Next Story