வெள்ளத்தில் சிக்கி தவித்த குட்டிகள்: காப்பாற்றிய போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்த தாய் நாய்...!


வெள்ளத்தில் சிக்கி தவித்த குட்டிகள்: காப்பாற்றிய போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்த தாய் நாய்...!
x
தினத்தந்தி 30 July 2023 10:24 AM GMT (Updated: 30 July 2023 11:16 AM GMT)

அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுகரையை நோக்கி குரைத்தது.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேச மாநிலம் நந்திகம் அருகே உள்ள அய்த்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி நதி ஒன்று உள்ளது.

நதிக்கரையை ஒட்டி உள்ள மாட்டுக்கொட்டகையில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்றது. நேற்று அதிகாலை தாய் நாய் உணவு தேடி நதியின் மறுகரைக்கு வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட மழை வெள்ளத்தால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமத்தை சூழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த நந்திகம் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கிருந்த தாய் நாய் அங்கும் இங்கும் அலறியபடி மறுகரையை நோக்கி குரைத்தது. இதனை கண்ட போலீசார் படகு மூலம் மறுகரைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு இருந்த கொட்டகையில் நாய்க்குட்டிகள் இருப்பதை கண்டனர். குட்டிகளை மீட்டு தாய்நாயிடம் ஒப்படைத்தனர். தனது குட்டிகளை கண்ட நாய் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வாலை ஆட்டியபடி ஆனந்த கண்ணீர் வடித்தது. காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.


Next Story