சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


சொரப் அருகே கடன் தொல்லையால்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 23 July 2023 6:45 PM GMT (Updated: 23 July 2023 6:45 PM GMT)

சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா-

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா இண்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது35). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. அதில், தினேஷ் விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் வங்கி, நண்பர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தினேசிற்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவரால் வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் தினேசிடம் பணத்தை திரும்ப கேட்டனர்.

ஆனால் அவரிடம் கொடுப்பதற்கு பணம் இல்ைல. இதனால் தினேஷ் மனகவலையில் இருந்து வந்தார். மேலும் நண்பர்கள், உறவினர்கள் யாரிடமும் அவர் பேசாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தினேஷ் விவசாய நிலத்திற்கு சென்றார்.

அங்கு இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தினேஷ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சொரப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சொரப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story