சொந்த உழைப்பில் வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது; அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில்


சொந்த உழைப்பில் வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது; அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில்
x

ரூ.200 கோடி பணமோசடி வழக்கில், தனது சொந்த உழைப்பில் வருவாயாக வந்த பணம் முடக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பதில் அளித்து உள்ளார்.



புதுடெல்லி,



பணமோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் 200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டினார்.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடியில், ரூ.5.71 கோடியை ஜாக்குலினுக்கு பரிசாக சந்திரசேகர் கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் முடக்கியது.

இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்துள்ளார் என கூறியுள்ள நடிகை ஜாக்குலின், அவர் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை எல்லாவற்றையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்பு கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்ட விசாரணை அதிகாரிகளுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் எழுதியுள்ள கடிதத்தில், அதிகாரிகள் முடக்கியுள்ள நிரந்தர வைப்பு தொகைக்கும், குற்றத்திற்கும் எந்தவித தொடர்பில்லை என்று தெரிவித்து உள்ளார். குற்றத்தின் அடிப்படையில் அந்த தொகை உருவாகவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிரந்தர வைப்பு தொகையானது, நடிகையின் சொந்த, சட்டப்பூர்வ வழியிலான வருவாய் வழியே வந்த பணம் என்றும் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை தெரிவதற்கு முன்பே தன்னிடம் அந்த பணம் இருந்தது என்றும் அவர் தெரிவித்து உள்ளார் என அமலாக்க துறை தெரிவித்து உள்ளது.

இந்த வழக்கில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆனது, பரிசுகளை பெற்றேன் என்றே கூறப்பட்டு உள்ளது என்றும் நடிகை ஜாக்குலின் தனது பதிலில் சுட்டி காட்டியுள்ளார்.


Next Story