நேஷனல் ஹெரால்டு வழக்கு: 13-ம் தேதி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்


நேஷனல் ஹெரால்டு வழக்கு: 13-ம் தேதி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்
x

Image Courtesy: PTI

நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் யங் இந்தியன் நிறுவனம் கையகப்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி அளவுக்கு கடன் அளித்ததை காரணம் காட்டி அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்து விட்டதாக குற்றம்சாட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி டெல்லி கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார்.

இதனிடையே, இந்த பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்டு சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ராகுல் காந்தி கடந்த 2-ம் தேதி (நேற்று) மற்றும் சோனியா காந்தி வரும் 8-ம் தேதி (புதன்கிழமை) அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், தான் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி அமலாக்கத்துறையிடம் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி, நேஷன்ல் ஹெரால்டு வழக்கில் விசாரணைக்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story