பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை - கபில் சிபல் தாக்கு


பா.ஜனதா தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுப்பதில்லை - கபில் சிபல் தாக்கு
x

அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அமலாக்க இயக்குநரகத்தின் (ED) நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் கபில் சிபல், பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள் குறித்து அமலாக்கத் துறைக்கு தெரிய வந்தாலும், மத்திய ஏஜென்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கிறது. பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை அகற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோள் பா.ஜனதா கட்சியின் மனதில் இருப்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், "அமலாக்கத்துறையின் நம்பகத்தன்மை குறித்து பல முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன, இதற்கு முன்பும் நான் தேர்தலில் போட்டியிட்ட பல பெயர்களை கூறியுள்ளேன், மேலும் அவர்கள் மீது எந்த வழக்குகள் உள்ளன என்பதையும் கூறியுள்ளேன். பா.ஜனதா தலைவர்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகள் உள்ளன, இது போன்ற பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு இந்த தகவல் தெரியும், பிறகு ஏன் அவர்கள் (ED) அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை..?

லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதை கூட பா.ஜனதா விரும்பவில்லை. அவர்களுக்கு (பா.ஜனதா) ஒரு குறிக்கோள் உள்ளது, அது எதிர்க்கட்சிகளை குறிவைத்து அவர்களை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான், அவர்களால் (எதிர்க்கட்சிகள்) லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாது, அவர்கள் பிரச்சாரம் செய்யாவிட்டால் அது நிச்சயமாக பக்க விளைவுகள் ஏற்படும்" என்று அவர் கூறினார்.


Next Story