எகிப்து அதிபர் இந்தியா வருகை; குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்...!


எகிப்து அதிபர் இந்தியா வருகை; குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்...!
x

இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் இன்று டெல்லி வந்தடைந்தார்.

டெல்லி,

இந்தியாவின் 73வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடியரசு தினத்தன்று டெல்லி கடமை பாதையில் முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவின் முன் வரிசை இருக்கைகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டிய தொழிலாளர்கள், சைக்கிள் ரிக்சா வண்டி இழுப்பவர்கள், சுமை தூக்குபவர்கள், காய்கறி விற்பவர்கள், பால் விற்பவர்கள் உள்பட சாதாரண மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக குடியரசு தின விழாவின் போது வெளிநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவிற்கு எகிப்து அதிபர் அப்டெல் பதஹ் எல் சிசி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க எகிப்து அதிபர் எல் சிசி இன்று இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்த வருகையின் போது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள எகிப்து அதிபர் எல் சிசி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்திக்கிறார்.


Next Story