ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை; டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பேரணி


ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை; டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பேரணி
x

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் இன்று பேரணி சென்றனர்.

புதுடெல்லி,



நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் 2 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி நிர்வாக இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா வாங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதன்பேரில், ராகுல் காந்தி கடந்த 13ந்தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். 14 மற்றும் 15ந்தேதிகளிலும் அவரிடம் விசாரணை நடந்தது. 3 நாட்களிலும் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த‌து. ஆனால், தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்து கொள்வதற்கு ஏதுவதாக விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்கள் விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற அமலாக்கத்துறை, நேற்று (திங்கள் கிழமை) விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு ராகுல் காந்தி நேற்று மீண்டும் ஆஜரானார். 40 மணிநேரம் அவர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். இதனை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் அவர் ஆஜராகி உள்ளார்.

காங்கிரசின் முன்னாள் தலைவர், வயநாடு எம்.பி.யான ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியலில் மத்திய அரசு ஈடுபடுகிறது என கூறி காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை நடத்தும் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு சென்றனர். வழிநெடுகிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் மூவர்ண கொடிகளை பிடித்தபடியும், கோஷங்களை எழுப்பியபடியும் அவர்கள் சென்றனர்.


Next Story