அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் காரசார வாதம்


அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் காரசார வாதம்
x

கோப்புப்படம்

அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என சுப்ரீம் கோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது எனவும், அவரை காவலில். எடுத்து விசாரிக்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேல்முறையீடு

இதை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இதற்கிடையே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் பாதிக்கப்பட்ட ஆரணியைச் சேர்ந்த ஒய்.பாலாஜி சார்பில் வக்கீல் பாலாஜி சீனிவாசன் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், 'இந்த விவகாரத்தில் சமாதானமாக போகுமாறு தெரிவித்து தெரியாத நபர்களிடம் இருந்து மிரட்டல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. செந்தில் பாலாஜி சிறையில் ஆடம்பரமாக இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதுவும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தமிழ்நாடு அரசு உடந்தையாக இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

எனவே இந்த விவகாரத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் அல்ல

இதற்கிடையே நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் கபில் சிபல் வாதிடுகையில், 'சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் தனித்தன்மை வாய்ந்தது எனவே அமலாக்கத் துறை அதிகாரிகள் காவல் அதிகாரிகள் என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இந்த வாதங்களை நிராகரித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்ற முடிவுக்கு கோர்ட்டு் வந்துள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் இல்லை என்றால் எந்த அதிகாரத்தை கொண்டு போலீஸ் காவலை அவர்கள் கோர முடியும்?:

அந்நியச்செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய அதிகாரம் இருந்தாலும் அவரை காவலில் வைத்து விசாரிக்க கோர முடியுமா?. இது சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பொருந்தும். காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரம் அமலாக்கத் துறைக்கு இல்லை. அமலாக்கத் துறை காவல்துறை அதிகாரிகள் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பிறகு மீண்டும் அவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான் என அமலாக்கத் துறை தெரிவித்து வருகிறது. அமலாக்கத்துறை சம்மன் வழங்கப்பட்ட நபர், தான் குற்றவாளியா? சாட்சியா? என்பது தெரியாது.

சட்டத்தை வளைக்க முடியாது

சந்தேகத்தின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்வதை போல, அமலாக்கத் துறை கைது செய்ய முடியாது ஆதாரங்களை திரட்டிய பிறகுதான் கைது செய்ய முடியும். புகார்தாரர் அளித்த விவரங்களையே, ஆதாரங்களாக முன்வைத்து விட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் விசாரிக்க வேறு என்ன உள்ளது?, தேவைப்பட்டால் சிறைக்கு சென்று குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரிக்கலாமே தவிர, அமலாக்கத் துறை காவல் கோருவது முறையாகாது. சட்டத்தில் இல்லாததை அமலாக்கத் துறையினர் கோர முடியாது. வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கவும் முடியாது' என வாதிட்டார்.

வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தள்ளி வைத்துள்ளது.


Next Story