2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி உயருகிறது


2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி உயருகிறது
x

கோப்புப்படம்

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தொழிலாளர் வருங்கால வைப்புநிதிக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு நிதி ஆண்டும், நிதி சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் பரிந்துரையின் பேரில் வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றியமைக்கிறது.

அந்த வகையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மந்திரி பூபேந்தர் யாதவ் தலைமையில் மத்திய அறங்காவலர் குழுவின் 235-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 8.25 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

2020-21 நிதி ஆண்டில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.50 சதவீதமாக இருந்தது. பின்னர், 2021-22-ல் அதிரடியாக 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது.

1977-78 நிதி ஆண்டுக்குப் பிந்தைய காலத்தின் மிகக் குறைந்த வட்டி விகிதமாக அது இருந்தது. அதன்பிறகு, 2022-23-ல் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது வட்டி விகிதம் 8.25 சதவீதமாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசாணையில் வெளியிடப்பட்டு, பயனாளர்களின் கணக்குகளில் வட்டி தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story