'இந்தியாவின் உள்விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விவாதிக்கிறது; பிரதமர் மவுனம் காக்கிறார்' - ராகுல் காந்தி


இந்தியாவின் உள்விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் விவாதிக்கிறது; பிரதமர் மவுனம் காக்கிறார் - ராகுல் காந்தி
x

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த மே மாதம் தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான கடைகள், வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த மணிப்பூரில் ஊரடங்கு, இணைய சேவை தடை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே மணிப்பூர் விவகாரம் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம், தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. மேலும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான உரிமை குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அதற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் உள்விவகாரங்களில் இதுபோன்ற அந்நிய நாட்டின் தலையீடுகளை ஏற்க முடியாது என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்சி தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அந்நாட்டு தேசிய தினம் அணிவகுப்பில் பங்கேற்றிருந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து 26 ரபேல் போர் விமானம் வாங்க ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

"மணிப்பூர் எரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இந்தியாவின் உள்விவகாரம் பற்றி விவாதிக்கிறது. ஆனால் நமது பிரதமர் இதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுனம் காக்கிறார். ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்புக்கான டிக்கெட்டைப் பெற்றுவிட்டார்" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.




Next Story