அமலாக்கத்துறை இயக்குனருக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


அமலாக்கத்துறை இயக்குனருக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

அமலாக்கத்துறை இயக்குனருக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

அமலாக்கத் துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், அமலாக்கத் துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3-வது முறை பதவி நீட்டிப்பு வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது, எனவே பதவி நீட்டிப்பு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் அவர் ஜூலை இறுதி வரை பணியில் தொடருவார் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே இந்த தீர்ப்பில் மாற்றம் செய்து அக்டோபர் 15-ந்தேதி வரை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நாட்டு மக்களின் நலன் கருதி, அமலாக்கத் துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15-ந்தேதி வரை பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டதுடன், பதவி நீட்டிப்பு கேட்டு மேலும் மனு தாக்கல் செய்யக்கூடாது. செப்டம்பர் 15-ந்தேதி நள்ளிரவுக்கு மேல் அவர் இயக்குனராக நீடிக்க கூடாது என்றும் தெளிவுப்படுத்தியது.


Next Story