விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்


விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்
x

Image Courtesy : PTI

தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

புதுடெல்லி,

விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர்.

போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானா மாநிலம், அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதனால் தொடர்ந்து முன்னேற முடியாமல் கடந்த 3 நாட்களாக அரியானா எல்லையில் உள்ள சம்பு மற்றும் கனோரி பகுதிகளில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து 4-வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சம்பு எல்லைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று போலீசார் ஏற்படுத்திய தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டத்தில் பங்கேற்ற கியான் சிங்(63) என்ற விவசாயி இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story