2-வது நாளில் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு


2-வது நாளில் விவசாயிகள் போராட்டம்: டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு
x

டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக 10 ஆயிரம் டிராக்டர்களில் படையெடுத்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீசப்பட்டது.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதே சமயத்தில் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல் ஆகியோருடன் விவசாய சங்கங்கள் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தின. ஆனால் அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை.

எனவே, பிப்ரவரி 13-ந்தேதி, டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லிக்கு படையெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு போராட்டத்தைபோல், பெரும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் கருதினர். எனவே, போராட்டத்தை முறியடிக்க டெல்லி போலீசாரும், அரியானா மாநில அரசும் 144 தடை உத்தரவு பிறப்பித்தன.

மேலும் டெல்லி எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், கொக்கி வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டன. கன்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. வாகனங்களின் டயர்களை பஞ்சர் ஆக்குவதற்காக சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டன.

இதுபோல், அரியானா மாநில பா.ஜனதா அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. பஞ்சாபை ஒட்டிய அம்பாலா அருகில் உள்ள ஷாம்பு எல்லையில் ஏராளமான தடுப்புகளை அமைத்தது. ஜிண்ட், பதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சா ஆகிய இடங்களிலும் பாதுகாப்புகளை பலப்படுத்தியது. மாவட்டங்களில் 64 கம்பெனி துணை ராணுவப்படைகளும், 50 கம்பெனி அரியானா போலீசும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலை 10 மணிக்கு பஞ்சாப் மாநிலம் பதேகார் சாகிப்பில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏராளமான டிராக்டர்களில் ஷாம்பு எல்லை வழியாக செல்ல அவர்கள் திட்டமிட்டனர். அதன்படி டிராக்டர்கள் டெல்லி நோக்கி படையெடுக்க தொடங்கின.

அங்கிருந்து 40 கி.மீ. தூரம் தாண்டி ஷாம்பு எல்லை உள்ளது. ஷாம்பு எல்லையை நெருங்கியவுடன், அங்கு குவிக்கப்பட்டிருந்த அரியானா மாநில போலீசார், விவசாயிகளை திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். அதை மீறி விவசாயிகள் டிராக்டர்களுடன் முன்னேறி வந்தனர். போலீசாரை நோக்கி கற்களையும் வீசினர். சில இளம் விவசாயிகள், கான்கிரீட் தடுப்புகளை அகற்ற முயன்றனர்.

வேறு சில விவசாயிகள், இரும்பு தடுப்பு ஒன்றை அகற்றி, காக்கர் ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே வீசினர். நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அரியானா போலீசார், விவசாயிகளை நோக்கி கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அதனால் ஏற்பட்ட கண் எரிச்சலையும், இருமலையும் பொருட்படுத்தாமல் பல விவசாயிகள் முன்னேறி வந்தனர். பின்னர், ஒரு டிரோன் மூலமாகவும் போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசினர். முன்னேறி வந்த விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு மணி நேர களேபரத்துக்கு பிறகு, தடுப்புகளுக்கு அருகே விவசாயிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். சில விவசாயிகள், பக்கத்து வயலில் இறங்கி செல்ல முயன்றபோது, அவர்கள் மீதும் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

இந்நிலையில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளது. டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் மட்டுமின்றி, மத்திய டெல்லியின் முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. கட்டிடத்தை சுற்றிலும் துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் மெட்ரோ ரெயில்கள் மூலம் வந்து விடுவார்கள் என்று அஞ்சப்படுவதால், நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய இடங்களை ஒட்டிய மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில் மூடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி இல்லம் அமைந்துள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியிலும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா ஆகியோரது வீடுகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காசிப்பூரில் இருந்து அக்ஷர்தாம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிரேன்கள் மற்றும் பொக்லைன் எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தனியார் வாகனங்கள் மூலம் டெல்லியில் நுழைய வாய்ப்பு இருப்பதால், வணிக வாகனங்களையும், தனியார் வாகனங்களையும் போலீசார் சோதனையிட்டு வருகிறார்கள். செங்கோட்டை செல்லும் வெளிவட்ட சாலையிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன்களை பயன்படுத்தி 2வது நாளாக கண்ணீர் புகை குண்டு வீசப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகளை போலீசார் தாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story