பில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது - தண்டனை வழங்கிய நீதிபதி கருத்து


பில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது - தண்டனை வழங்கிய நீதிபதி கருத்து
x

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

குஜராத் மாநிலத்தில் கடந்த 2022-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தின்போது 2022 பிப். 28-ம் தேதி டோஹட் மாவட்டம் ராதிக்பூர் கிராமத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார்.

21 வயதான பில்கிஸ் பானு 5 மாதம் கர்ப்பினியாக இருந்தார். அவருக்கு 3 வயதில் பெண் குழந்தையும் இருந்தது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்கள் 17 பேருடன் வேறு கிராமத்திற்கு புறப்பட்டார்.

2002 மார்ச் 3-ம் தேதி பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஷபர்வாட் என்ற கிராமத்தை அடைந்த போது 20-30 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது.

பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக்கொன்ற அந்த கும்பல் கர்ப்பினியான பில்கிஸ், அவரது தாயார், மேலும் 3 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. பில்கிஸ் பானுவின் குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

17 பேரில் பில்கிஸ் பானுவும், ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 11 பேர் குற்றவாளிகள் என 2008-ம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி யுடி சல்வி தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளான ரதீஷம் ஷா, ஜெஷ்வந்த் சதுர்பாய் நய், கேஷ்பாய் வேதன்யா, பகபாய் வேதன்யா, ராஜ்பாய் சோனி, ரமேஷ்பாய் சவுகான், ஷைலேஷ்பாய் பட், பிபின் சந்திர ஜோஷி, கோவிந்தபாய் நய், மிதீஷ் பட், பிரதீப் மோதியா ஆகிய 11 குற்றவாளிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மும்பை சிபிஐ சிறப்பு கோர்ட்டு நீதிபதி யுடி சல்வி கருத்து தெரிவித்துள்ளார்.

'பில்கிஸ் பானுவுக்கு துணை நிற்போம்' என்ற தலைப்பில் 'அநீதி மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம்' என்ற அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி யுடி சல்வி பங்கேற்றார்.

நிகழ்ச்சியின் போது பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த யுடி சல்வி, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதில் நான் எதுவும் சிறப்பாக செய்ததாக நான் கருதவில்லை. எனது தீர்ப்பு எனது கடமை. கருணை அடிப்படையில் குற்றவாளிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இது சட்டத்தின் படி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆகும். குற்றவாளிகளை விடுதலை செய்ய எந்தெந்த காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது என எனக்கு தெரியாது. ஆகையால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த மாநில அரசின் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.

ஆனால், குற்றவாளிகள் சிலரால் கவுரவிக்கப்படுவது அருவருப்பானது. குற்றவாளிகள் அவர்களாகவே இந்த கவுரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. நான் பிறப்பித்த தீர்ப்பை மீண்டும் வாசித்து பார்க்க விரும்புகிறேன். ஆனால், நீண்ட நாட்கள் ஆனதால் அந்த தீர்ப்பு கிடைக்கவில்லை' என்றார்.


Next Story