பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை


பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

துமகூருவில் விநாயகர் சிலை கரைப்பின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனா்.

துமகூரு

துமகூரு (மாவட்டம்) டவுன் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு விசுவ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள அமைப்பு சார்பில் விநாயகர் சிலை கரைப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி, துமகூரு டவுன் எம்.ஜி.ரோடு வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

இதற்காக எம்.ஜி. ரோடு உள்ளிட்ட சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஒரு வாலிபர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுபற்றி அவர், துமகூரு டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தர்ஷன் (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவெம்பு நகரை சேர்ந்த இவர், விநாயகர் கரைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்ததும், கூட்ட நெரிசலின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story