காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி - விசாரணை தீவிரம்


காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி - விசாரணை தீவிரம்
x

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

பூஞ்ச்,

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவது வழக்கம்.

அந்தவகையில் நேற்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் ரஜோரி செக்டாரில் பிம்பர்காலி-பூஞ்ச் இடையே ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ராஷ்ட்ரீய ரைபிள் படைப்பிரிவை சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மேலும் இருளும் சூழ்ந்திருந்தது. இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சிலர் ராணுவ வாகனத்தை நோக்கி திடீரென தாக்குதல் நடத்தினர். துப்பக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் அவர்கள் தாக்கினர்.

5 வீரர்கள் வீரமரணம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்தது. அதில் இருந்த வீரர்கள் சுதாரிப்பதற்குள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானார்கள்.

இந்த தாக்குதலை அரங்கேற்றியதும், பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

எதிர்பாராத இந்த தாக்குதலில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் ராஷ்ட்ரீய ரைபிள் படையை சேர்ந்த ஏராளமான வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள், ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடிய பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கு வசதியாக அந்த பகுதியை சுற்றி வளைத்த ராணுவம், அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டத்தையும் ரத்து செய்தது.

ராணுவம் உறுதி

முன்னதாக பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அத்துடன் படுகாயமடைந்த வீரரை மீட்டு ராஜ்புரியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலை ராணுவம் உறுதி செய்திருந்தது. கனமழை மற்றும் இருளை பயன்படுத்தி பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறியுள்ள ராணுவம், இந்த தாக்குதலில் ராணுவ வாகனம் தீ பிடித்ததாகவும், பயங்கரவாதிகளின் கையெறி குண்டு வீச்சு காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தது.

முன்னதாக, ராணுவ வாகனத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. எனினும், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் பின்னர் உறுதிப்படுத்தியது.

பயங்கரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.


Next Story