"மல்யுத்த வீராங்கனைகள் புகார் பற்றி பேசாதது ஏன்?" - ஸ்மிரிதி இரானியை சாடிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.


மல்யுத்த வீராங்கனைகள் புகார் பற்றி பேசாதது ஏன்? - ஸ்மிரிதி இரானியை சாடிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.
x

ராகுலின் பறக்கும் முத்தம் விவகாரம் தொடர்பாக ஸ்மிரிதி இரானியை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாடினார்.

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால், எம்.பி. பதவியை திரும்பப் பெற்று, நாடாளுமன்றம் சென்ற ராகுல்காந்தி, நேற்று முன்தினம், பிரதமர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி பேசினார். சபைக்கு வந்த அவர், எம்.பி.க்களை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்ததாக, ராகுலின் உரைக்குப் பின்பு பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம் சாட்டினார். "இதுபோன்ற அநாகரீகமான செயலை சபை பார்த்ததில்லை்" என்று சாடி இருந்தார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடமும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் ஸ்மிரிதி இரானியை, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி. மஹுவா மொயித்ரா, கடுமையாக விமர்சித்தார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களை சந்தித்த அவர், "பா.ஜ.க. எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டபோதும், இப்போது வரை அதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசாத பெண்கள் நலத்துறை மந்திரி இரானி இப்போது பறக்கும் முத்தத்தைப் பற்றி பேசுகிறார். நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.


Next Story