110 ஆண்டுகளில் முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினரே இல்லாத உத்தரபிரதேச மேல்-சபை..!!


110 ஆண்டுகளில் முதல் முறையாக காங்கிரஸ் உறுப்பினரே இல்லாத உத்தரபிரதேச மேல்-சபை..!!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 7 July 2022 2:24 AM GMT (Updated: 7 July 2022 2:30 AM GMT)

உத்தரபிரதேச மேல்-சபையில் 110 ஆண்டுகளில் முதல் முறையாக காங்கிரசுக்கு உறுப்பினரே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச சட்ட மேல்-சபை 1887-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. 1909-ம் ஆண்டு, 46 உறுப்பினர்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. அப்போது, ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு, காங்கிரசின் முதலாவது உறுப்பினராக (எம்.எல்.சி.) பதவி ஏற்றார்.

அதில் இருந்து தொடர்ந்து மேல்-சபையில் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது. தற்போது, காங்கிரஸ் சார்பில் ஒரே எம்.எல்.சி.யாக இருந்த தீபக்சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த 110 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை துயரமானது என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் ஆராதனா மிஸ்ரா மோனா தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், புதிதாக யாரையும் மேல்-சபைக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. இருப்பினும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஆசிரியர்கள் ஒதுக்கீட்டில் மேல்-சபைக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் பிரதிநிதிகளை அனுப்ப முயற்சிப்போம் என்று ஆராதனா மிஸ்ரா மோனா கூறினார். அதே சமயத்தில், 100 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில், 72 உறுப்பினர்களுடன் ஆளும் பா.ஜனதா வலிமையான இடத்தில் உள்ளது.


Next Story