தாய்-மகன் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது


தாய்-மகன் கொலை வழக்கில் கள்ளக்காதலன் கைது
x

கோப்புப்படம் 

இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த கொலையாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

விஜயாப்புரா,

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் சுருதி (வயது 33). இவரது மகன் ரோகித் (13). சுருதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் விஜயாப்புராவை சேர்ந்த சாகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் சுருதியுடன் பேசுவதை சாகர் நிறுத்தினார். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுருதி, தனது மகன் ரோகித்தை அழைத்து கொண்டு சாகரை சந்திக்க விஜயாப்புரா சென்றார். அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த சுருதி, சாகரை அங்கு வரவழைத்தார். அப்போது விடுதி அறையில் வைத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சாகர், சுருதியையும், அவரது மகன் ரோகித்தையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் 2 பேரின் உடல்களையும் சூட்கேசில் வைத்து கிணற்றில் வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு தாய்-மகனின் உடல்களை போலீசார் கிணற்றில் இருந்து மீட்டனர். உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால் முதலில் போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை.

அதன்பிறகு போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மைசூருவை சேர்ந்த சுருதி, அவரது மகன் ரோகித் என்பதும், அவர்களை சுருதியின் கள்ளக்காதலன் கொலை செய்து உடல்களை சூட்கேசில் அடைத்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

இதுகுறித்து திக்கோடா போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகரை தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் இரட்டை கொலை தொடர்பாக தலைமறைவாக இருந்த சாகரை நேற்று முன்தினம் திக்கோடா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரட்டை கொலை வழக்கில் ஓராண்டு கழித்து சாகர் போலீசில் சிக்கி உள்ளார்.


Next Story