மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டுகள் சிறை...!


மோசடி வழக்கில் குஜராத் முன்னாள் மந்திரிக்கு 7 ஆண்டுகள் சிறை...!
x
தினத்தந்தி 14 July 2023 8:23 AM GMT (Updated: 14 July 2023 10:25 AM GMT)

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், குஜராத் முன்னாள் மந்திரியுமான விபுல் சவுத்ரிக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மெஹ்சானா,

குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும், 1996-ல் சங்கர்சிங் வகேலா அரசில் மந்திரியாகவும் இருந்தவர், விபுல் சவுத்ரி. கடந்த 2014-ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட மராட்டியத்திற்கு மாட்டுத் தீவனம் வழங்காமல் ஏமாற்றி ரூ.22.5 கோடி மோசடி செய்ததாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனால் மெஹ்சானா 'பி' பிரிவு காவல் நிலையத்தில் விபுல் சவுத்ரிமீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மாட்டுத் தீவன மோசடி குற்றம் சாட்டப்பட்டதால் அவர், குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மெஹ்சானாவின் கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஒய் ஆர் அகர்வால் தலைமையில் நேற்று(வியாழன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபணம் ஆனதால் மாஜிஸ்திரேட், இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 420-ன் கீழ் சவுத்ரி மற்றும் 14 பேரை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார்.

இதனால் விபுல் சவுத்ரிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் துத்சாகர் டெய்ரியின் முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அதன் முன்னாள் துணைத் தலைவர் ஜலபென் தாக்கூர் மற்றும் முன்னாள் நிர்வாக இயக்குநர் நிஷித் பாக்ஸி ஆகியோருக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story