ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டு கொலை; செங்கோட்டையில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி


ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டு கொலை; செங்கோட்டையில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி
x

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.



புதுடெல்லி,



ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தவர். அந்த நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்ததுடன், லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு, அவர் உடல்நல குறைவை காரணம் காட்டி பதவி விலகினார். ஆனாலும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபைக்கு நாளை (10ந்தேதி) தேர்தல் நடக்க உள்ளது.

நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது.

அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று அமெரிக்க அதிபர் பைடன், ஜப்பான் பிரதமரை தொடர்பு கொண்டு, அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார் என அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே மறைவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி, நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.


Next Story