ஆந்திர பிரதேசத்தில் வாயு கசிவு; 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி பாதிப்பு


ஆந்திர பிரதேசத்தில் வாயு கசிவு; 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி பாதிப்பு
x

ஆந்திர பிரதேசத்தில் அம்மோனியா வாயு கசிவால் 200 பெண்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.



அமராவதி,


ஆந்திர பிரதேசத்தில் அம்மோனியா வாயு கசிவால் 200 பெண்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் அச்சுதாபுரம் பகுதியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் போரஸ் என்ற ரசாயன ஆய்வகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதற்கு அருகே பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வளாகத்தில் சீட்ஸ் அப்பேரல் இந்தியா என்ற மற்றொரு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இதில், 1,800 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போரஸ் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இந்த வாயு கசிவானது அருகேயிருந்த நிறுவனத்திற்கும் பரவியுள்ளது. இதில், சீட்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணியில் இருந்த 200 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைவலி மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அச்சுதாபுரம் பகுதியில் உள்ள 2 மருத்துவமனைகள் மற்றும் என்.டி.ஆர். மருத்துவமனைக்கு உடனடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். மற்ற பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர்.

இதன் எதிரொலியாக பிராண்டிக்ஸ் அப்பேரல் இந்தியா நிறுவனத்தில் பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் ஊழியர்களும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டெல்லிக்கு சென்றுள்ள முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சம்பவம் பற்றி அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். சிறந்த சிகிச்சை வழங்க அதிகாரிகளிடம் கூறியுள்ளதுடன், சம்பவம் பற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.


Next Story