மனைவி தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார்: ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவர்


மனைவி தினமும் அடித்து சித்ரவதை செய்கிறார்: ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற கணவர்
x
தினத்தந்தி 23 April 2024 5:14 AM GMT (Updated: 23 April 2024 5:44 AM GMT)

மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை அப்பகுதி மக்களிடம் கணவர் காட்டினார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த கொம்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ். அப்பகுதியில் உள்ள ஜெயபேரி பூங்காவில் உள்ள ஏரியில் திடீரென இறங்கினார் ஏரியில் இறங்கிய நாகேஷ் எனது மனைவி என்னை அடித்து சித்ரவதை செய்கிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி கொடுங்கள் என கத்தியபடி இருந்தார்.நீண்ட நேரம் ஏரியில் கத்தியபடி இருந்த வாலிபரை வெளியே வருமாறு அப்பகுதி மக்கள் கூறினர்.ஆனால் வாலிபர் ஏரியில் இருந்து வெளியே வர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தார்.

நீண்ட நேரத்திற்கு பிறகு அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி நாகேஷை வெளியே இழுத்து வந்தனர்.நாகேஷிடம் ஏன் ஏரிக்குள் இறங்கினாய் என விசாரித்தனர். என் மனைவி என்னை தினமும் அடித்து சித்ரவதை செய்வதால் கோபம் அடைந்து ஏரியில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்.குழந்தைகளிடம் பேசக்கூட அனுமதிப்பதில்லை. அப்பா இறந்து விட்டார் என குழந்தைகளிடம் தவறாக கூறுகிறாள்.

மேலும் அவரது மனைவி அடித்ததால் ஏற்பட்ட காயங்களை காட்டினார்.தினமும் என்னை அடிக்கிறார். என்னால் அடி வாங்க முடியவில்லை. வலி தாங்க முடியவில்லை. மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொடுங்கள் இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன் என வேதனையோடு தெரிவித்தார்.

அங்கிருந்தவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். நாகேஷ் கூறிய விசித்திரமான வீடியோவை பார்த்தவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story