ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்


ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள்: ஜாம்நகர் வந்திறங்கிய முன்னணி பிரபலங்கள், நட்சத்திரங்கள்
x
தினத்தந்தி 1 March 2024 12:26 PM GMT (Updated: 1 March 2024 12:29 PM GMT)

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

ஜாம்நகர்,

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் இன்று முதல் (மார்ச் 1) வருகிற 3-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற இருக்கிறது. நேற்று முன்தினம் இரவு ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் அழைத்து 51 ஆயிரம் பேருக்கு அம்பானி குடும்பம் விருந்து அளித்தது. முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

இந்த நிலையில் பேஸ்புக் சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால், கிரிக்கெட் வீரர்கள் ரஷித் கான், சூர்யகுமார் யாதவ், எம்.எஸ்.தோனி அவரது மனைவி சாக்ஷி மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் ஏற்கனவே ஜாம்நகருக்கு வருகை தந்துள்ளனர். மேலும் பலர், வருகிற நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இன்று ஜாம்நகர் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற மாயைக்காரர் (illusionist) டேவிட் பிளேன் மற்றும் அரிஜித் சிங், அஜய்-அதுல் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் போன்ற சிறந்த இந்திய கலைஞர்கள் மூன்று நாள் நிகழ்ச்சிகளில் தங்களது திறமைகள் மூலம் விருந்தினர்களை கவர உள்ளனர்.

கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரகுமான் பின் ஜாசிம் அல் தானி, பூட்டான் மன்னர் மற்றும் ராணி, பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் குய்ரோகா, ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட், கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் ஸ்வீடன் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அராம்கோவின் தலைவர் யாசிர் அல் ருமையன், பிளாக்ராக் லாரி ஃபிங்கின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அடோப் சாந்தனு நாராயண், மெட்டா சிஓஓ ஜேவியர் ஒலிவன், உலகப் பொருளாதார மன்றத்தின் தலைவர் கிளாஸ் ஷ்வாப் ச்எஸ்பிசி ஹோல்டிங்ஸ் குழுமத் தலைவர் மார்க் டக்கர், ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தி வால்ட் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர், பாங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைவர் பிரையன் தாமஸ் மொய்னிஹான் உள்ளிட்ட சில முன்னணி வணிகத் தலைவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து கார்ப்பரேட் தலைவர்கள் கவுதம் அதானி, நந்தன் நிலேகனி, சஞ்சீவ் கோயங்கா, ரிஷாத் பிரேம்ஜி, உதய் கோடக் மற்றும் ஆதார் பூனாவாலா, பிரபல திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், அமீர்கான், கரண் ஜோஹர், அனில் கபூர், மாதுரி தீட்சித், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா மற்றும் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Next Story