மும்பை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி


மும்பை விமான நிலையத்தில் தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
x

பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரக பணமான ‘திர்காம்’ பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர், தனது பெல்ட்டில் 9.895 கிலோ எடை கொண்ட தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தங்கத்தின் மதிப்பு 5 கோடியே 20 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்திய போது, இந்த தங்கத்தை துபாய் விமான நிலையத்தில் 2 சூடான் நாட்டவர்களிடம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர மேலும் 4 பயணிகளிடம் இருந்து உள்ளாடைகளில் மறைத்து கொண்டு வரப்பட்ட 2 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5.101 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் செல்ல இருந்த 2 பயணிகளிடம் இருந்து, பிஸ்கட் பாக்கெட்டுகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐக்கிய அரபு அமீரக பணமான 'திர்காம்' பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story