இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை


இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
x

இந்திய இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதாக கூறப்படும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

பெரும் அதிர்ச்சி சம்பவம்

அரியானாவின் சோனிபட்டில் உள்ள மெய்டன் மருந்து நிறுவனம் 4 வகையான இருமல் மருந்துகளை தயாரித்து வருகிறது. இவை ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன. அங்கு இந்த மருந்துகளை எடுத்துக்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த தகவல்களை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருப்பதாகவும் கூறியது.

இந்த மருந்துகளில் டை எத்திலின் கிளைக்கால் அல்லது எத்திலின் கிளைக்கால் நச்சு கலந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை தீவிரம்

இதைத்தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்ட மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இது தொடர்பாக அரியானா மாநில கட்டுப்பாட்டு அமைப்புடன் இணைந்து விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது.

மேலும் குழந்தைகள் மரணம் தொடர்பான விரிவான விசாரணை அறிக்கையை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பையும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த அறிக்கை இன்னும் வழங்கப்படவில்லை.

4 பேர் குழு

இந்த நிலையில் காம்பியா குழந்தைகள் மரணம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வழங்கியிருக்கும் முதற்கட்ட அறிக்கை மற்றும் பக்க விளைவு குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு 4 நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை மத்திய அரசு நேற்று அமைத்தது.

மருந்துகள் தேசியக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஒய்.கே.குப்தா, புனே ஐ.சி.எம்.ஆர் அதிகாரி டாக்டர் பிரக்யா யாதவ், டெல்லி தொற்றுநோயியல் பிரிவு அதிகாரி டாக்டர் ஆர்த்தி பால், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி ஏ.கே.பிரதான் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மற்றும் பக்கவிளைவு குற்றச்சாட்டுகளை இந்த குழுவினர் விரிவாக ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு பரிந்துரை வழங்குவார்கள்.

உற்பத்தியை நிறுத்த உத்தரவு

இதற்கிடையே சோனிபட்டில் இயங்கி வரும் மெய்டன் மருந்து நிறுவனம், தனது உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு அரியானா மாநில அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அத்துடன் சமீபத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட பல விதிமீறல்கள் குறித்து ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக்கொண்டு உள்ளது. தவறும் பட்சத்தில் நிறுவனத்தின் லைசென்ஸ் ரத்து அல்லது தற்காலிக ரத்து செய்யப்படும் என கூறியுள்ளது.


Next Story