பணவீக்கம் பற்றி விவாதம் நடத்த அரசு தயார்; மத்திய மந்திரி பியுஷ் கோயல்


பணவீக்கம் பற்றி விவாதம் நடத்த அரசு தயார்; மத்திய மந்திரி பியுஷ் கோயல்
x

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கம் தற்போது 7% என்ற அளவில் உள்ளது என மத்திய மந்திரி பியுஷ் கோயல் இன்று கூறியுள்ளார்.



புதுடெல்லி,



நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எரிபொருள் மற்றும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை பற்றி விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவை நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களால் அவை ஒத்தி வைக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்நிலையில், மத்திய மந்திரி பியுஷ் கோயல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பணவீக்கம் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நாட்டில் பணவீக்கம் குறைவாக நீடிக்க என்ன நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம் என மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். ரகசியம் வெளிவந்து விடும் என்று அவர்களுக்கே தெரியும் என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து வந்தது.

ஆனால், அது தற்போது 7% என்ற அளவில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவாகும். பல எதிர்க்கட்சிகள் ஆள கூடிய மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வாட் வரி இன்னும் குறைக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Next Story