நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்
x

கோப்புப்படம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி முதல் ஆகஸ்டு 11ம் தேதி வரை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து, நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. 19 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. அத்துடன் 18 மசோதாக்கள் உள்பட முக்கிய அலுவல்களை இந்த தொடரில் மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

எனவே இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்துக்கட்சிகளின் ஆதரவையும் அரசு நாடியுள்ளது. இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றுக்கு அரசு அழைப்பு விடுத்திருந்தது.

நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நடத்தும் இந்த கூட்டம் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story