உ.பி.யில் கின்னஸ் உலக சாதனை முயற்சி; 12 லட்சம் விளக்குகளை ஏற்ற முடிவு


உ.பி.யில் கின்னஸ் உலக சாதனை முயற்சி; 12 லட்சம் விளக்குகளை ஏற்ற முடிவு
x
தினத்தந்தி 9 Oct 2022 2:27 AM GMT (Updated: 9 Oct 2022 6:05 AM GMT)

உத்தர பிரதேசத்தில் புதிய கின்னஸ் உலக சாதனை முயற்சியாக தீபாவளியை முன்னிட்டு 12 லட்சம் விளக்குகளை ஏற்ற ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

அயோத்தியா,

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து மீண்டும் 2-வது முறையாக பா.ஜ.க. அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

யோகி தலைமையிலான உத்தர பிரதேச அரசு தீபாவளியை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. இதன்படி, அயோத்தியா நகரில் 12 லட்சம் விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக அயோத்தியா, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டில் 30 நிமிடங்களுக்கும் கூடுதலாக இந்த விளக்குகள் எரியும். நீண்ட நேரம் எரியும் விளக்குகளை மக்கள் காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

இதற்கு முன்பு, விளக்குகள் விரைவாக அணைந்து விடும். இதனால், விளக்கொளியின் பிரமிப்பை மக்கள் பார்க்க முடியாமல் போனது. விளக்குகள் நீண்ட நேரம் எரிவதற்காக தலா 40 மி.லி. எண்ணெய் விளக்கில் ஊற்றப்படும்.

கடந்த ஆண்டு தீபோற்சவத்தின்போது, அயோத்தியாக நகரில் 9 லட்சம் மண் விளக்குகள் ஏற்றப்பட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு இருந்தது.


Next Story