டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைப்பு


டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
x

கோப்புப்படம்

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி வழக்கு விசாரணை 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுதலை செய்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வாதங்களை முன்வைக்க சி.பி.ஐ.க்கும், எதிர் மனுதாரர்களுக்கும் எத்தனை நாட்கள் வேண்டும் என்று நீதிபதி கேட்டார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் 6 நாட்களும், எதிர் மனுதாரர்கள் சார்பில் 25 நாட்களும் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

அப்போது நீதிபதி தினேஷ் குமார் சர்மா, இந்த மேல்முறையீட்டு அனுமதி மனுக்கள் மீதான விசாரணையை விரைவில் நிறைவு செய்ய வேண்டும், வாதங்களை நிறைவு செய்ய வேண்டிய காலவரையறையை அனைத்து வக்கீல்களும் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் விசாரணையை 16-ந்தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story