ராஜஸ்தானில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு


ராஜஸ்தானில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு
x

கோப்புப்படம்

ராஜஸ்தானில் நாளையும், தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

ஜெய்ப்பூர்,

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் இந்த மாதம் நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் நாளையும் (சனிக்கிழமை), தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடக்கிறது.

200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், அங்கு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பா.ஜனதாவும் தீவிரமாக மல்லுக்கட்டி வருகின்றன.

பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள், பா.ஜனதா முதல்-மந்திரிகள் என கட்சியின் முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

இதைப்போல காங்கிரஸ் கட்சி சார்பிலும் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைத்தவிர ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ராஜஸ்தான் தேர்தலில் தங்கள் வெற்றிக்கணக்கை தொடங்க திட்டமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சூறாவளியாக நடந்த இந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தின் கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.25 கோடி என தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ள தேர்தல் கமிஷன், அமைதியான வாக்குப்பதிவை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Next Story