உ.பி.யில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 பேர் காயங்களுடன் மீட்பு!


உ.பி.யில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 பேர் காயங்களுடன் மீட்பு!
x

கோப்பு படம் 

உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அலிகாரில் உள்ள பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் மின்னல் மற்றும் கனமழையால், சுவர், வீடு இடிந்து விழுந்த சம்பவங்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.

அலிகரில், கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால், நகரின் பல தாழ்வான பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் தண்ணீர் தேங்கி, மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சனிக்கிழமை வரை மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இந்தர் வீர் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.கனமழை காரணமாக இப்பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அலிகார் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடந்தது. அதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

சத்தம் கேட்ட உடனே, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 9 பேரையும் மீட்டனர். எனினும், வீட்டின் உரிமையாளரின் வளர்ப்பு நாய் இடிபாடுகளுக்குள் உயிருடன் புதைந்து இறந்தது.

இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக, உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் முதல், இதே போன்று சுவர் இடிந்த விபத்துக்களில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story