சர்தார் வல்லபாய் படேல் முதல் பிரதமராகி இருந்தால் இந்தியா பல பிரச்சனைகளை சந்தித்திருக்காது- அமித்ஷா


சர்தார் வல்லபாய் படேல் முதல் பிரதமராகி இருந்தால் இந்தியா பல பிரச்சனைகளை சந்தித்திருக்காது- அமித்ஷா
x

Image Courtesy: PTI 

படேல் இல்லாவிட்டால், இந்தியாவின் வரைபடம் இன்றைய நிலையில் இருந்திருக்காது என அமித் ஷா தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்பட்டவர், சர்தார் வல்லபாய் படேல். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான படேல், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். அவரது 147-வது பிறந்த தினமான இன்று, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் வல்லபாய் படேல் பதவியேற்றிருந்தால், நாடு இன்று எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை சந்தித்திருக்காது" என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் வல்லபாய் படேல் குறித்து அமித்ஷா மேலும் பேசுகையில், "ஒருவர் மறைந்த பிறகும் நீண்ட காலமாக நினைவு கூறப்படுபவராக இருந்தால் அவரை நிச்சயம் 'மிக சிறந்தவர்' என்று தான் சொல்ல முடியும். அதுதான் சர்தார் வல்லபாய் படேல். அவர் இல்லாவிட்டால், இந்தியாவின் வரைபடம் தற்போது இருக்கும் நிலையில் இருந்திருக்காது.

லட்சத்தீவு, ஜோத்பூர், ஜூனாகத், ஐதராபாத் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளை ஒன்றாகக் கொண்டு வந்த பெருமை அவரையே சேரும். மத்திய போலீஸ், உளவுத்துறை மற்றும் பல நிறுவனங்களுக்கு அடித்தளமிட்டவர் சர்தார் படேல்" என்றார்.


Next Story