கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது


கலசாவில்  சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அதனை விற்பனை செய்தவரும் போலீசில் சிக்கினார்.

சிக்கமகளூரு-

கலசாவில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார். அதனை விற்பனை செய்தவரும் போலீசில் சிக்கினார்.

வனவிலங்குகள் வேட்டை

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா மாவினகெரே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளை மர்மநபர்கள் வேட்டையாடி வருகிறார்கள். இதனை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், மர்மநபர்கள் நாட்டுத்துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளனர்.

இந்தநிலையில், மாவினகெரே கிராமத்தில் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக கலசா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சத்திய நாராயணா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் சட்டவிரோதமாக நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததும், அந்த நாட்டுத்துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்டவற்றை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. மேலும் சத்திய நாராயணா நாட்டுத்துப்பாக்கியை சீனிவாசன் என்பவரிடம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சீனிவாசனை தேடி வந்தனர். இந்தநிலையில் கலசாவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து கலசா போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story