சட்டவிரோத பயணம்; குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் வந்த தமிழர்கள் 3 பேர் மீது வழக்கு


சட்டவிரோத பயணம்; குவைத்தில் இருந்து மும்பைக்கு படகில் வந்த தமிழர்கள் 3 பேர் மீது வழக்கு
x

மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

மும்பை,

குவைத்தில் இருந்து மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதிக்கு படகு ஒன்று நேற்று வந்து சேர்ந்தது. அந்த படகில், இருந்தவர்களிடம் மும்பை போலீசார் விசாரணை செய்தனர்.

இதில், அவர்கள் சட்டவிரோத வகையில் நாட்டுக்குள் நுழைந்துள்ளது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக அவர்கள் குவைத்துக்கு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களை அழைத்து சென்ற ஏஜெண்டு, 3 பேரையும் சரிவர நடத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் குவைத்தில் இருந்து தப்பி வந்துள்ளனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, மும்பைக்குள் சட்டவிரோத வகையில் நுழைந்ததற்காக, பாஸ்போர்ட்டுகள் சட்டத்தின் தற்காலிக பிரிவுகளின் கீழ் கொலாபா போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

2008-ம் ஆண்டு நவம்பரில் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின்பு, அவர்கள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உள்பட 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


Next Story