ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்


ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2023 4:48 AM GMT (Updated: 2 Dec 2023 5:23 AM GMT)

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா-எல் 1 விண்கலம் 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

பெங்களூரு,

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம் செய்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'லெக்ராஞ்சியன்' புள்ளி-1ஐ சென்றடையும் என்றும், அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

இதற்கிடையில், ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று சமீபத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. விண்கலத்தில் 7 கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கருவிகளில் இரண்டாவது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) என்ற கருவி தற்போது செயல்படத்தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா சூரிய காற்று துகள் கருவியில் புரோட்டான், ஆல்பா துகள்களில் உள்ள எண்ணிக்கை மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியால் கைப்பற்றப்பட்ட புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் எண்ணிக்கையில் உள்ள ஆற்றல் மாறுபாடுகளை ஹிஸ்டோகிராம் விளக்குகிறது.


Next Story