சித்ரதுர்காவில் தொழில் அதிபர்கள் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது


சித்ரதுர்காவில்  தொழில் அதிபர்கள் கடத்தல் வழக்கில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:45 PM GMT)

சித்ரதுர்காவில் தொழில் அதிபர்களை கடத்தி ரூ.60 லட்சம் பணம், நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனர்.

சிக்கமகளூரு-

சித்ரதுர்காவில் தொழில் அதிபர்களை கடத்தி ரூ.60 லட்சம் பணம், நகைகளை பறித்து சென்ற 3 பேரை போலீசாா் கைது செய்தனர்.

தொழில் அதிபர்கள் கடத்தல்

சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் கூறியதாவது:-

சித்ரதுர்கா டவுன் பேங்க் காலனியை சேர்ந்தவர் சமீர் அகமது. இவரது மருமகன் பாஷா ஜான். இவர்கள் 2 பேரும் சொந்தமாக தொழில் செய்து வருகின்றனர். கடந்த 8-ந் தேதி காலை இவர்களது வீ்ட்டிற்குள் நுழைந்த 3 பேர் கும்பல் சமீர் அகமது, மருமகன் பாஷாஜான் உள்பட 7 பேரை சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் 7 பேரின் கை, காலை கட்டி போட்டு வீட்டில் இருந்த ஒரு அறையில் அடைத்தனர்.பின்னர் அன்றைய தினம் மாலை அந்த கும்பல் சமீர் அகமது, பாஷா ஜான் ஆகிய 2 பேரை மட்டும் கடத்தி சென்றனர். முன்னதாக அந்த கும்பல் சமீர் அகமதுவின் குடும்பத்தினரை மிரட்டி ரூ.50 லட்சம் பணம் மற்றும் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளை எடுத்து சென்றனர். இந்த கடத்தல் குறித்து சமீர் அகமதுவின் குடும்பத்தினர் சித்ரதுர்கா போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து சித்ரதுர்கா மற்றும் தாவணகெரே போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதற்கிடையே மர்ம நபர்கள் தொழில் அதிபர்கள் 2 பேரையும் வீட்டின் அருகே விட்டு தப்பி சென்றனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் தாவணகெரே அருகே சந்தேபென்னூர் பகுதியில் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் பயணித்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்த சாமுசாப் (வயது 38). பிரசன்னகுமார் (38), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது செரீப் (வயது 37) என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.46 லட்சம் மதிப்பிலான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story