நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு: கத்தாரில் இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழச்சி ரத்து செய்யப்பட்டதா...?


நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சு: கத்தாரில் இந்திய துணை ஜனாதிபதி விருந்து நிகழச்சி ரத்து செய்யப்பட்டதா...?
x
தினத்தந்தி 6 Jun 2022 10:57 AM GMT (Updated: 6 Jun 2022 10:58 AM GMT)

முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

புதுடெல்லி

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா டிவி விவாதம் ஒன்றில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதாக மராட்டிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அதேபோல் நவீன் ஜிந்தால் தனது டுவிட்டர் பதிவில் நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு சர்வதேச அளவில் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் ஆகிய இருவரை நீக்கம் செய்து பாஜக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தனித் தனியே இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுபுர் சர்மாவுக்கு அனுப்பியுள்ள நோடீஸ்சில், உங்களின் கருத்து கட்சியின் சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே, இது தொடர்பாக உங்கள் மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், நீங்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறீர்கள் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் மற்றொரு செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிந்தாலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்சில், நீங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்து கட்சியின் அடிப்படை கொள்கை மற்றும் சட்டத்திற்கு எதிரானது. எனவே, நீங்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அந்த கட்சியின் சார்பாக வெளியிட்ட அறிக்கையில், "எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பாஜக கடுமையாக கண்டிக்கிறது. பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் எதிரானது. பாஜக அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை இந்தியாவின் ஆயிரக்கணக்கான வருட வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது"

ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்தது.

முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக சவுதி அரேபியா குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கத்தார் சென்று இருந்த நேரம் பார்த்து இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று வெங்கையா நாயுடு கத்தார் அதிபரின் தந்தை ஷேக் ஹமாத் பின் கலீபா அல் தானியுடன் சந்திப்பு நடத்தினார். அதன்பின் பிரதமர் ஷேக் காலித் அப்துல்லாஸ் அல் தானியுடன் சந்திப்பு நடத்தினார். அந்த நேரத்தில்தான் இந்தியாவில் பரபரப்படும் இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தொடர்பாக கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மீட்டலிடம் கத்தார் சார்பாக விளக்கம் கேட்கப்பட்டது. கத்தார் இந்தியாவிற்கு சம்மன் அனுப்பியது.

சரியாக ஜனாதிபதி வெங்கையா நாயுடு கத்தார் சென்ற நிலையில் இந்த சம்மன் வந்தது பெரிய சர்ச்சையானது. இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் வெங்கையா நாயுடு மேற்கொள்ள இருந்த செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதோடு அந்நாட்டு துணை அதிபர் ஷேக் அப்துல்லா பின் அகமதுடன் நடக்க இருந்த மதிய உணவு விருந்தும் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. துணை அதிபர் இன்றி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் சில கத்தார் தலைவர்கள் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தியாவில் நபிகள் அவமதிக்கப்பட்டதால் இந்த உணவு விருந்தில் அந்நாட்டு துணை அதிபர் கலந்து கொள்ளவில்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு கத்தார் - இந்தியா இடையிலான இஸ்லாமிய கருத்து மோதல் காரணம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. துணை அதிபர் மருத்துவ காரணம் ஒன்றிற்காக மீட்டிங்கிற்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தோஹாவை அடைவதற்கு முன்பே இது தெரிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டு உள்ளது.


Next Story