இந்தியாவில் இந்த முறை ஆகஸ்டு 23-ந்தேதியில் இருந்து பண்டிகை காலம் தொடக்கம்; பிரதமர் மோடி உரை


இந்தியாவில் இந்த முறை ஆகஸ்டு 23-ந்தேதியில் இருந்து பண்டிகை காலம் தொடக்கம்; பிரதமர் மோடி உரை
x
தினத்தந்தி 27 Aug 2023 8:03 AM GMT (Updated: 27 Aug 2023 10:52 AM GMT)

டெல்லியில் 55 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

புதுடெல்லி,

ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாட்டுக்கு நடப்பு ஆண்டில் இந்தியா தலைமையேற்று உள்ளது. இதன்படி, ஜி-20 தலைவர்களுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு, ஒத்திகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

சர்வதேச வர்த்தக சமூகத்துடன் கூடிய அதிகாரப்பூர்வ ஜி-20 பேச்சுவார்த்தைக்கான அமைப்பாக பி-20 இந்தியா உச்சி மாநாடு நடத்தப்படும். இதன்படி, இந்த மாநாடு கடந்த 25-ந்தேதியில் இருந்து தொடங்கி 27-ந்தேதி வரை நடந்து வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் 55 நாடுகளை சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் ஒரு தெளிவான கவனத்துடன் கூடிய இந்த பி-20 ஆனது, ஜி-20 குழுக்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி இதனை குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி டெல்லியில் பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் இன்று உரையாற்றுவதுபற்றி எக்சில் (முன்பு டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், பி-20 இந்தியா உச்சி மாநாடு 2023-ல் இன்று மதியம் 12 மணியளவில் நான் உரையாற்ற உள்ளேன். வர்த்தக உலகில் பணியாற்றும் ஒரு விரிவான அளவிலான பங்குதாரர்களை இந்த தளம் ஒன்றிணைத்து கொண்டு வருகிறது என அதில் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பி-20 இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இன்று பேசும்போது, இந்த முறை இந்தியாவில் பண்டிகை காலம் ஆகஸ்டு 23-ந்தேதியில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த கொண்டாட்டம் நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கியது ஆகும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலவு திட்டத்தில் இஸ்ரோ ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதனுடன் சேர்ந்து இந்தியாவின் தொழிற்சாலைகளும் ஒரு முக்கிய பங்காற்றியது. இந்த கொண்டாட்டம் இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியது. இந்த கொண்டாட்டம் புதிய கண்டுபிடிப்பு பற்றியது.

இந்த கொண்டாட்டம் ஆனது, விண்வெளி தொழில் நுட்பத்தின் உதவியால் நீடித்த மற்றும் சமத்துவ வளர்ச்சியை கொண்டு வருவது ஆகும் என்று அவர் பேசியுள்ளார்.


Next Story